மோடி இந்தியாவின் பிரதமரான பின்பு 40,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே பணியாளர்கள் மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, “ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் நோக்கத்தை எட்டுவதற்கு, நாம் நமது ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி போக்குவரத்தை இயக்க வேண்டும். மொத்த ரயில் போக்குவரத்தையும் மின்மயமாக்கினால் மட்டுமே இது சாத்தியப்படும். 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகான இந்த ஒன்பதரை ஆண்டுகளில் மட்டும் 40,000 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ரயில்களை இயக்கினால் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு குறையும். இதன் மூலம் மோடியின் தொலைநோக்கு பார்வை வெளிப்படுகிறது.
இதையும் படிக்க: ’அரக்கோணம் ஸ்டைல்’ கவனம் ஈர்க்கும் புளூ ஸ்டார் பாடல்!
ரயில் போக்குவரத்தின் தேவை நாட்டில் அதிகமாக உள்ளது. எனவே இதனை சரியாக பராமரித்தல், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.
வளர்ந்த நாடுகளில் ரயில்கள் இயக்கப்படுவதற்கு 26 வாரங்கள் முன்னதாகவே பராமரிப்பு பணிகள், பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் தொடங்கி, எல்லாம் அடுத்த 26 வாரங்களுக்கான ரயில்கள் தயாராக வைக்கப்படும். நம் நாட்டிலும் அத்தகைய முறையை பின்பற்ற உள்ளோம்.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 5,000 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதை, புதிய ரயில் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது.” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.