ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு!

ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு!

புதுச்சேரி அரசு ஆட்டோ சவாரிக்காகப் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாகப் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கேரளாவில் நடைமுறையில் உள்ள 'கேரளா சவாரி'யை ஒத்தது எனப் போக்குவரத்துத்துறை ஆணையர் எ.எஸ். சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் ஆட்டோ சவாரிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணக்கமற்ற மற்றும் தகுந்த அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. 

பலமுறை ஆட்டோ சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அரசியல் பின்புலங்களைக் கொண்ட சில தொழிலாளர் சங்கங்களால் ஆட்டோ ஓட்டுனர்கள் தவறான வழிகளில் நடத்தப்படுகின்றனர் என சிவக்குமார் தெரிவித்தார். 

ஆட்டோ ஓட்டுனர்கள் 2016ல் வெளியிடப்பட்ட அரசாணையில் அறிவுருத்தப்பட்ட கட்டணங்களையே பெற வேண்டும். குறைந்தபட்சக் கட்டணமாக, முதல் 1.8 கிலோ மீட்டர்களுக்கு 35 ரூபாயும், அதற்கு மேல் ஒரு கிலோமீட்டருக்கு 18 ரூபாயும், அதைத்தவிர ஐந்து நிமிடத்திற்கு 5 ரூபாய் வீதமும் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது புதுச்சேரியின் போக்குவரத்துத் துறை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com