ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சனம் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சத்தீஸ்கரின் மஹாதேவ்கட்டில் உள்ள காருண் ஆற்றில் புனித நீராடி பிரார்த்தனை செய்த பூபேஷ் பகேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கார்த்திகை மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது சத்தீஸ்கரில் பரவலாக பின்பற்றப்படும் வழக்கம்.
இன்றளவும் கிராமப் பகுதிகளில் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் நானும் காருண் ஆற்றில் அதிகாலையில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்தேன். சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பாஜக அரசியல் செய்து வருகிறது.
சத்தீஸ்கரில் ஏராளமான ராமர் கோயில்களை காங்கிரஸ் ஆட்சியில் கட்டியுள்ளோம். ஆனால் ராமரின் பெயரைச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்பதில்லை. ராமரை வைத்து அரசியல் செய்வதில்லை.” என்று கூறினார்.
இதனையடுத்து தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இரண்டு நாட்கள் தெலங்கானா செல்லவுள்ளதாக பூபேஷ் பகேல் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக ஏற்கனவே நிறைவடைந்தது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.