

புது தில்லி: உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 30 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ், உலக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் 28 -ஆவது மாநாடு வரும் 28 -ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை துபையில் நடைபெறுகிறது.
டிசம்பர் 1, 2 தேதிகளில் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, வரும் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 30 -ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
அமீரகம் செல்லும் மோடி, அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபரையும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக காலநிலை நடவடிக்கை மாநாடு காலநிலை மாற்றத்தின் பகிரப்பட்ட சவாலை எதிர்த்து கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகத்தை அளிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.