ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும் பத்திரிக்கையாளருமான ஜெசின்டா கெர்கேட்டா இந்தியா டுடே குழுமத்தால் அறிவிக்கப்பட்ட இலக்கிய விருதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்தியா டுடே குழுமத்தால் 'ஆஜ் தக் சாஹித்யா ஜக்ரிதி உதயமன் பிரதிபா சம்மன்' (Aaj Tak Sahitya Jagriti Udyman Pratibha Samman) எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டுவருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜெசின்டா கெர்கேட்டாவின் 'ஈஸ்வர் அவுர் பசார்' எனும் புத்தகம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதோடு 50000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விருதை ஏற்க ஜெசின்டா மறுத்துவிட்டார்.
இதற்குக் காரணமாக, மணிப்பூர் பழங்குடியினரின் உயிருக்கு ஊடகங்கள் மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்காமல் விட்டதாகக் கூறியுள்ளார். மணிப்பூர் மக்கள் தங்கள் உயிருக்கான மரியாதையை இழந்துகொண்டிருந்தபோது முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அலட்சியமாக நடந்துகொண்டன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுவரை எந்த ஊடகமும் பழங்குடி மக்களின் துயரங்களை மரியாதையான முறையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில்லை எனக் கூறியுள்ளார். "மணிப்பூர் மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் உயிருக்கு மரியாதை மறுக்கப்படும்போதும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் குழந்தைகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், எந்த ஒரு விருதாலும் ஒரு கவிஞனையோ எழுத்தாளனையோ மகிழ்விக்க முடியாது" எனத் தனது எக்ஸ் பக்கத்தில் கெர்கேட்டா பதிவிட்டுள்ளார்.
இந்த விருதுக்குத் தேர்வான 'ஈஸ்வர் அவுர் பசார்' எனும் அவரது புத்தகம் பழங்குடியின மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் விழா தில்லியில் நவ.26 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா டுடே நிர்வாகிகள் அவரது முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின் பல படைப்புகள் அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.