தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
2000-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக வலம்வந்தார்.
மேலும், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, மாநில அமைச்சர் அங்கம் வகிக்கக் கூடிய “நவீன ஒடிசா” திட்டத்தின் தலைவர் பதவியை கார்த்திகேயன் பாண்டியனுக்கு நவீன் பட்நாயக் வழங்கினார்.
இதையும் படிக்க | யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசாவில் தமிழ்ப் புயல்!
இந்த நிலையில், நவீன் பட்நாயக் முன்னிலையில் திங்கள்கிழமை காலை பிஜு ஜனதா தள கட்சியில் அதிகாரப்பூர்வமாக கார்த்திகேயன் பாண்டியன் இணைந்தார்.
இந்த நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.