பிகார் கல்வித்துறை, இந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறைகளை ரத்து செய்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. மேலும் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு விடுமுறைகளைக் கூட்டியுள்ளது. இதனால், பிகார் அரசு இந்துக்களை எதிர்க்கும் அரசு என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
பிகார் கல்வித்துறை ரக்ஷா பந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது. தீபாவளி, துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை நாள்களைக் குறைத்து, பக்ரித் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு விடுமுறைகளைக் கூட்டியுள்ளது.
முன்னாள் துணை முதல்வரும் சட்டமன்ற உறுப்பினருமான சுஷில் குமார் மோடி, பிகார் கல்வித்துறை இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். இது இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சுரங்கப்பாதைக்கு வெளியே... இனிப்பு, மாலைகளுடன் குடும்பத்தினர்
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் இந்துக்களின் வாக்குகளைப் பெற நினைத்தார், இப்போது இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் எனக் குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கைகள் மூலம் பிகார் அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பது தெரிகிறது. இந்த விடுமுறை ரத்துக்களை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.