தனது தந்தை நலமுடன் இருப்பதாக பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னின் மகள் நந்தனா சென் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக செய்திகள் வெளியாகின.
நடப்பாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற 'கிளாடியா கோல்டின்' பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில், அமர்த்தியா சென் இறந்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்தது.
பின்னர் இந்த கணக்கு பொய்யானது என்றும் அமர்த்தியா சென் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இதையும் படிக்க | ஹமாஸ்: யார்? என்ன விரும்புகிறது? தாக்குதல் ஏன்?
இந்நிலையில் தன்னுடைய அப்பா நலமுடன் இருப்பதாக அமர்த்தியா சென்னின் மகள் நந்தனா சென் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இது பொய்யான செய்தி. பாபா(அப்பா) நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு வாரத்தை நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாகக் கழித்தோம். நேற்றிரவு நாங்கள் விடைபெறும்போது அப்பாவின் அணைப்பு எப்போதும்போல் வலுவாக இருந்தது. அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு 2 பாடப்பிரிவுகளுக்கு கற்பிக்கிறார், தனது புத்தகத்தில் பணிபுரிகிறார். அவர் எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்!' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தந்தை அமர்த்தியா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.