காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையையொட்டி ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த நிலையில், காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சுற்றி போலீஸார் மற்றும் துணை ராணுவப் படைகள் உள்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபமாக நகரத்தில் விழிப்புணர்வைப் பராமரிக்க ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குடியரசுத் தலைவரின் காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் காவல்துறை இயக்குநர் ஜென்ரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாகக் கூட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.