வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100 கோடி பேர் வாக்களிக்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தில்லியில் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறும் பி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறினார்.
பி-20 உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா இதுவரை 17 பொதுத் தேர்தல்களையும், 300 முறை மாநில பேரவைத் தேர்தல்களையும் நடத்தியிருக்கிறது.
இதையும் படிக்க.. ‘வந்தே பாரத்’களும் விரிசல் தண்டவாளங்களும்!
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மக்கள் எங்கள் கட்சியை மீண்டும் ஆட்சியமைக்கவைத்தனர். இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தலாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் திறன் காரணமாக, ஒரு சில மணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடுகின்றன.
வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அமைதி, சகோதரத்துவம், முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம் இது. அதுமட்டுமல்ல, இது அனைவரின் முன்னேற்றத்துக்குமான நேரம் என்றும் மோடி கூறினார்.
யஷோபூமி என்று அழைக்கப்படும் துவாரகாவின் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 27 நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.