நவராத்திரி பண்டிகை தொடங்க உள்ள நிலையில் நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையை எடுத்துக் கூறும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் ‘கர்போ’ எனும் பாடல் ஒன்றினை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி எழுதியுள்ள இப்பாடலுக்கு தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ளார். பாலிவுட் பாடகி த்வானி பனுஷாலி பாடியுள்ளார். இயக்குநர் நதீம் ஷா இப்பாடலை இயக்கியுள்ளார்.
சனிக்கிழமை யூட்யூபில் வெளியிடப்பட்ட இப்பாடல் சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது.
இந்த விடியோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நவராத்திரி நெருங்கும் வேளையில், கடந்த சில நாட்களில் நான் எழுதிய கர்போ எனும் பாடலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டிகை கால மகிழ்ச்சி அனைவரையும் அரவணைக்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பாபர் அசாமுக்கு விராட் கோலி வழங்கிய பரிசு!
மேலும், இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்காக தனிஷ்க் பாச்சி மற்றும் அவரது இசைக்குழு, தான்வி வினோத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழாவானது அக்டோபர் 15-ஆம் தேதியான இன்று தொடங்கி அக்டோபர் 24-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.