கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கழிவுநீர் அகற்றும்போது தொழிலாளர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால், இந்த உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
அதுபோல, கழிவுநீர் அகற்றும் பணியின்போது படுகாயமடையும், நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள், கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மேலும், கழிவுநீர் அகற்றும் பணிகளின்போது ஏற்படும் மரணங்கள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் கண்காணிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க.. கணவர் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்துக் கொன்ற விஞ்ஞானி
ஒரு பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது. விரிவான உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் மேற்கோள் காட்டப்பட்ட மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது 347 பேர் மரணமடைந்துள்ளனர். இதில், உத்தரப்பிரதேசம், தமிழகம், தில்லியில் 40 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.