ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் திட்டத்தில் சனிக்கிழமை நடக்கவிருந்த மாதிரி விண்கல சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதற்கான முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானில் பனிமூட்டம், மேகக்கூட்டங்கள் காரணமாக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஏவப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு சோதனை நிறுத்தப்பட்டு சோதனை முயற்சி கைவிடப்பட்டது. வேறொரு நாளில் ககன்யான் விண்கலம் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
விண்கலத்தின் இன்ஜின் திட்டமிட்டப்படி செயல்படாததால் விண்கலம் ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும், ககன்யான் விண்கலம் பாதுகாப்பாக உள்ளது. மாதிரி விண்கலத்தை சமந்து செல்லும் ராக்கெட் ஏவுதல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.