ஷோக்பூர்: ஜம்மு மாவட்டத்தில், ஆர்னியா செக்டார் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று விடுமுறை விடப்பட்ட நிலையில், ஷோக்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பங்கருக்குள் அமர்ந்து பாடம் கற்றனர்.
பாகிஸ்தான் ரேஞ்சர்களிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நோக்கி மோர்ட்டார் குண்டுகள் மற்றும் தொடர்ந்து பயங்கர துப்பாக்கிச் சண்டை பெற்று வருகிறது. ஜம்மு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஆர்னியா செக்டார் மற்றும் ஆர்.எஸ். புரா செக்டார்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஏழு மணி நேரம் இரு தரப்பிலிருந்தும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரண்டு எல்லையோரப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்.
ஊடுருவல் முயற்சிகள் நடக்கும்போது அதனை திசைதிருப்பும் வகையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அரசு நடுநிலைப் பள்ளிக்குள் அமைக்கப்பட்டிருந்த பங்கருக்குள் 15 முதல் 20 மாணவர்கள் அமர்ந்து பாடம் கற்றனர். இரவு முழுக்க கடும் தாக்குதல் நடைபெற்ற நிலையில், காலையில் வழக்கம் போல அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்திருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.