ஆந்திர ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விஜயநகரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கல்வித்துறை அமைச்சர் போட்சா சத்தியநாராயணா, விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகலட்சுமி உள்ளிட்டோருடன், முதல்வர் சிகிச்சை வசதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
காயமடைந்த நோயாளிகளுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.