எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை குறுஞ்செய்தி எந்தவொரு அரசையும் குறிப்பிடவில்லை என்றும் அது தவறானதாகக்கூட இருக்கலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர், ராகுல் சத்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் ஆப்பிள் செல்போன்களுக்கு இன்று அதிகாலை எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 'உங்கள் கைபேசி மீது தாக்குதல் நடக்கலாம், அதில் உள்ள தகவல்கள் திருடப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் செல்போன் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | செல்போன் ஒட்டுக்கேட்பு திருடர்களின் வேலை: ராகுல் காந்தி கண்டனம்
இந்நிலையில் எச்சரிக்கை குறுஞ்செய்தி குறித்து ஆப்பிள் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
அதில், 'இந்த அச்சுறுத்தல் குறுஞ்செய்தி எந்தவொரு அரசையும் குறிப்பிடவில்லை.
அரசு ஆதரவு செல்போன் தாக்குதல்கள் அதிக நிதியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும், மேலும் அந்த தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இத்தகைய தாக்குதல்களைக் கண்டறிவது முழுமையற்றதாக சரியற்றதாக இருக்கும்,
ஆப்பிளின் சில அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறானதாகக்கூட இருக்கலாம், சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல்கூட இருக்கலாம்.
எதிர்க்கட்சியினருக்கு அனுப்பப்பட்ட இந்த எச்சரிக்கை செய்திக்கான காரணம் குறித்த தகவல்களை எங்களால் வழங்க முடியாது.
ஏனெனில் எதிர்காலத்தில் அரசு தரப்பில் நடத்தப்படும் செல்போன் தாக்குதல்களை கண்டறியாமல் போவதற்கு இது உதவக்கூடும்' என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கிட்டத்தட்ட 150 நாடுகளில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.