ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ பெருமிதம்

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலமானது, ராக்கெட்டிலிருந்து பிரிந்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ பெருமிதம்
Updated on
1 min read


விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலமானது, ராக்கெட்டிலிருந்து பிரிந்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதையடுத்து, சரியான ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து, ஆதித்யா விண்கலம், தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சரியாக திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா விண்கலம்.  சுமார் 2,298 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, ஆதித்யா விண்கலமானது தனித்த தனது பயணத்தைத் தொடர்கிறது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், சரியான பாதையில் செல்கிறது என்று அறிவித்தார்.

மேலும், அடுத்தடுத்து சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூர இலக்கை அடையும் என்றும் சோம்நாத் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நிலவை ஆராய சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமைந்துள்ளது.

இதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது. செவ்வாய் கிரகம், நிலவைத் தொடா்ந்து சூரியனின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி பேசுகையில், சரியான சுற்றவட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஆதித்யா. திட்டமிட்டபடி புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வெற்றிக்கு உதவிய வல்லுநர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

மேலும், ஆதித்யா விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சூரிய தகடுகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரியனை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா எல்-1 எனும் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (ஐஐஏ), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (ஐயுசிஏஏ), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (ஐஐஎஸ்இஆா்) ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com