மத்தியப் பிரதேசத்தின், முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜன் ஆசிர்வாத் யாத்திரையை கொடியசைத்துத் தொடங்கிவைக்க அமித் ஷா ஜபல்பூர் வந்தார். அவரை அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வரவேற்றார். பின்னர், மாண்ட்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் உரையில்,
கமல் நாத் அல்ல ஊழல் நாத். ஊழல் நாத்தால் 51-க்கும் மேற்பட்ட ஏழை நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அவரது ஆட்சிக் காலத்தில் முதல்வர் அலுவலகம் பணம் வசூலிக்கும் அலுவலகமாக மாறியது. காங்கிரஸ் காரிய கமிட்டி ஊழல் பணிக்குழுவாக ஆனது என்றார்.
இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் 5 வெவ்வேறு இடங்களில் பாஜக யாத்திரைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த யாத்திரை செப்.25-ம் தேதி மாநிலத் தலைநகர் போபாலில் நிறைவடைகிறது.
சமீபத்தில் மண்ட்லா மாவட்டம் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் எழுத்தறிவு பிரசாரம் தொடங்கப்பட்டதற்காக முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை வாழ்த்துகிறேன் என்றார்.
மேலும், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்காக பிரதமர் மோடி தொடர்ந்து உழைத்து வருவதாகவும், ஒவ்வொரு பிரிவினருக்கு பாஜக பாதுகாப்பை அளித்துள்ளதாகவும் அவர் பேசினார்.