உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் திமுக ஆட்சியை கலைக்கும் வேளைகளில் இறங்குவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும், அதுபோல சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன.
உச்சநீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என 262 பேர் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 'அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசினால், தமிழக அரசை ஆட்சியில் இருந்து நீக்கும் வேளைகளில் இறங்குவேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991ல் நிரூபித்தேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்காக அவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'சனாதன தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் உண்மைக்கு எதிராக வெறுப்பான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.