என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை என்று கூறியிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது, சந்திரபாபு நாயுடு கூறுகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
ஆந்திர முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் , ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
நந்தியாலா பகுதியில் இருந்து, சந்திரபாபுவை, சிஐடி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி முன் பாரத் என பெயர் பலகை
ஜெர்மனியில் உள்ள சீமென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.371 கோடி ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சிஐடி காவல்துறையினருடன் இணைந்து அமலாக்கத் துறையினரும் விசாரித்து வருகிறது.