உள்நோக்கத்துடன் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளதாக அவரின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
உடல்நிலை சரியில்லாததன் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நாளைக்கு (செப். 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ், சந்திரபாபு ரத்தத்திலேயே ஊழல் என்பது இல்லை. நாட்டில் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சந்திரபாபு நாயுடு. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்நோக்கத்துடன் சந்திரபாபுவை சிறையில் அடைத்துள்ளார். அனைத்து கட்சித் தலைவர்களும் எனக்குத் தொடர்புகொண்டு அவர்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஜெகன்மோகன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான வழக்கு என்ன தெரியுமா? விவேக் ஆனந்த் கொலை விவகாரத்தில் காவல் துறையிலிருந்து கடப்பா எம்.பி. அவினாஷ் உங்களைக் காப்பாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டார்.