ஒட்டுமொத்த உலகமும் சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியையும் ஆதித்யா-எல்1 திட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் நிலஅரிப்பு எனும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், ஸ்ரீஹரிகோட்டாவில் 100 மீட்டர் நிலப்பகுதியை கடல் அரிப்புக்கு இஸ்ரோ இழந்துவிட்டது. நில அரிப்பைத் தடுக்கும் கட்டமைப்பை மேற்கொள்ள ஆந்திர மாநில கடற்கரை மண்டல மேலாண் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
நில அரிப்பைத் தடுக்கும் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இது குறித்து பொதுவெளியில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ், 5 நில அரிப்பைத் தடுக்கும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும், இரண்டு முதல் மூன்று கட்டமைப்புகள் 100 முதல் 150 மீட்டரிலும், இரண்டு சிறிய கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 - 2020 முதலே இந்த பிரச்னை தொடங்கிவிட்டது. புயல் பாதிப்பின்போது கடற்கரையோர இரண்டு சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன, மூன்றாவது சாலையும் சேதமடைந்துவிட்டிருந்தது. மேலும் நிலப்பரப்பை இழக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு தீர்வு காணுமாறு, சென்னையைச் சேர்ந்த தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையத்தின் உதவியையும் சதீஷ் தவாண் விண்வெளி மையம் கோரியிருக்கிறது.
சென்னையில் பரிந்துரையில் உள்ள அதானி-காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நில அரிப்பு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் எச்சரிக்கையாக இருப்பதாகவும், இந்த விவகாரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு ஆளும் குழு உறுப்பினருமான ஜி சுந்தர்ராஜன் பேசுகையில், “அதானி-காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் ஸ்ரீஹரிகோட்டாவில் வண்டல் படிவு பாதிக்கும் என்ற அபாயத்தை நிராகரிக்க முடியாது. இது, பல சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர, இந்த விரிவாக்கத்தை எதிர்க்க வேண்டிய மற்றொரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.