புது தில்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக தில்லியில் தங்கியிருந்த அவர், செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
18-ஆவது ஜி20 உச்சி மாநாடு தில்லியில் கடந்த 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்க அதிபா் பைடன், பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்றனா்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்தாா். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் கனடா புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.
கனடா பிரதமரின் பயணம் தொடங்க வேண்டிய சில மணிநேரங்களுக்கு முன்பு அவரது விமானத்தில் எளிதில் சீா்செய்ய இயலாத தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அவா் தில்லியிலேயே தங்க வைக்கப்பட்டாா்.
அவரை அழைத்துச் செல்வதற்காக மாற்று விமானம் ஒன்று கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த விமானம் லண்டன் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோளாறான விமானம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, கனடா பிரதமர் மற்றும் அந்நாட்டின் ஜி20 பிரதிநிதிகள் அனைவரும் தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தில்லி விமான நிலையம் சென்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கனடா நாட்டு பிரதமரை வழியனுப்பி வைத்தனர்.