நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையோட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்புக் கூட்டத்தொடரையோட்டி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தனித்தனியே அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதில் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாள்கள் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.