/

ஊழல் செய்வதில் திமுக அமைச்சர்களிடையே போட்டி : பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவை என பிரதமர் மோடி பேச்சு..

News image
நரேந்திர மோடி - படம் - யூடியூப் / நரேந்திர மோடி
Updated On :1 மார்ச் 2026, 1:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டை போதை மாஃபியா கும்பல்களின் இடமாக திமுக மாற்றிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்னையில் சிக்கியிருப்பதாகவும் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவை எனவும் மோடி குறிப்பிட்டார்.

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம். ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள்

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள்

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

''தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேச மக்கள் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டினேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பூரணசந்திரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மனதை வருந்தச் செய்கிறது. அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிலர் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கனவு காண்கிறார்கள். தே.ஜ. கூட்டணி உடனான போட்டியில் அது கனவாகவே அவர்களுக்கு இருக்கும்.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உறுதி செய்யும். ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருந்ததை நினைவுகூர்கிறார்கள்.

நமக்கு நல்ல அரசியலமைப்பை, அடித்தளம் தந்தவர்கள் நம் முன்னோடிகள். அரசமைப்பை பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவரும் என மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சிதான்.

2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக ஊழல் செய்து, குடும்ப ஆட்சி நடத்தி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. ஒரு துரும்பைக் கூட ஏழைகளுக்காக கிள்ளிப் போடவில்லை திமுக.

அரசியலில் நேர்மை என்று வரும்போது ஒட்டுமொத்த நாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார் காமராஜர். திமுக இதற்கு நேர்மாறானது. அரசுப் பணி, ஒப்பந்தங்கள் பெறுவது, மணல் திருட்டு, டாஸ்மாக் மோசடி என பல்வேறு மோசடிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது.

நல்ல திட்டங்களைக் கொண்டுவருவதில் அமைச்சர்களிடையே போட்டி இருக்கும். ஆனால், திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி. மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக ஆட்சி.

தமிழ்நாட்டை போதை மாஃபியா கும்பல்களின் இடமாக திமுக மாற்றிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு போதை மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தாய், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றிப் பேசுகிறவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லை. ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்திற்கு நம் அரசு ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மந்திரி திட்டத்தில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி இன்னும் கள ஆய்வு செய்யாததால் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.

தமிழகத்திற்கு ரூ. 889 கோடியாக இருந்த வருடாந்திர நிதி ஒதுக்கீடு ரூ. 7,600 கோடி என 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு நிரந்தர இடம் அளித்து தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளித்துள்ளோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்'' என பிரதமர் மோடி பேசினார்.

summary

Competition among DMK ministers in corruption Narendra modi speech in Madurai NDA Conference

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.