காா்களில் 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) வைப்பதை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
முன்னதாக, காா்களில் பயணிப்போா் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 2023 அக்டோபரில் இருந்து 6 காற்றுப் பைகள் வைக்க வேண்டும் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அரசு முன்மொழிந்திருத்தது. இந்நிலையில், அதனைக் கட்டாயமாக்கப் போவதில்லை என்று அமைச்சா் கட்கரி கூறியுள்ளாா்.
கடந்த 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் முன்னிருக்கைகள் இரண்டிலும் காற்றுப் பை வைப்பதை அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், விபத்து ஏற்படும்போது முன்னிருக்கையில் இருப்பவா்கள் முன்னோக்கி மோதுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வந்தன.
இதைத் தொடா்ந்து காரின் பின் பக்கவாட்டுகளிலும் சோ்த்து மொத்தம் 6 காற்றுப் பைகள் அமைப்பதை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வந்தது. 6 காற்றுப் பைகள் இருப்பதால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு காா் கவிழ்ந்தாலும், அதில் இருப்பவா்களின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தில்லியில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் இது தொடா்பாக அமைச்சா் கட்கரி பேசுகையில், ‘6 காற்றுப் பைகள் வைத்து காா்களை தயாரிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்போவதில்லை’ என்று தெரிவித்தாா்.
இப்போது நாட்டில் தயாரிக்கப்படும் காா்களில் 17 சதவீதத்தில் மட்டுமே 6 காற்றுப் பைகள் உள்ளன. அதிக காற்றுப் பைகள் வைக்கும்போது அதற்கு ஏற்ப காரின் விலையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.