வலுவான நிலையில் நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் செய்ய வேண்டியதென்ன?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து...


டி20 உலகக் கோப்பைத் தொடரில் குரூப் 2 பிரிவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு யார் முன்னேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குரூப் 1-லிருந்து தென்னாப்பிரிக்காவும், குரூப் 2-லிருந்து இங்கிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. பிரேமதாசா திடலில் இன்று (பிப்ரவரி 27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில், 5 புள்ளிகளுடன் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி மிகவும் மோசமான தோல்வியை சந்திக்காமல் இருந்தாலும், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதற்கு காரணம் பாகிஸ்தான் அணியைக் காட்டிலும் நியூசிலாந்து அணி நல்ல ரன் ரேட்டில் உள்ளது. நியூசிலாந்தின் ரன் ரேட் 3.050 ஆகவும், பாகிஸ்தானின் ரன் ரேட் -0.461 ஆகவும் உள்ளது.
பல்லேகலே திடலில் நாளை (பிப்ரவரி 28) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே, அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். மிகப் பெரிய வெற்றியைப் பெறாமல், சாதரணமான வெற்றியைப் பெற்றால் நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். அதற்கு முன்பாக, இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் மிகப் பெரிய தோல்வியடைய வேண்டும்.
இன்றையப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில், நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் எளிதில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். நியூசிலாந்து அணி சாதாரணமாக தோல்வியடைந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அதன் காரணமாகவே, பாகிஸ்தானைக் காட்டிலும் நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணியால் மிகப் பெரிய வெற்றி பெற முடியுமா?
உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு எதிராக மிக முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி நாளை விளையாடவுள்ளது. இன்றையப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் தோல்வியடைகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் அணி வலுவாக இருக்கிறதா?
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மெச்சும்படியாக இல்லை. பந்துவீச்சில்கூட பரவாயில்லை. ஆனால், பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாகிப்ஸதா ஃபர்ஹானைத் தவிர வேறும் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. அவ்வப்போது, ஷதாப் கான் மற்றும் உஸ்மான் கான் இருவரும் ஆறுதலளிக்கும் விதமாக விளையாடுகின்றனர்.

ஷாகிப்ஸதா ஃபர்ஹான் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 283 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக வலம் வருகிறார். பாகிஸ்தான் அணியில் ஃபர்ஹானுக்கு அடுத்து ஷதாப் கான் 111 ரன்கள் குவித்துள்ளார்.
இவர்கள் ரன்கள் குவிக்கத் தவறும்பட்சத்தில், பாகிஸ்தானின் நிலை கவலைக்கிடமாக மாறிவிடும். இந்த சூழலில், இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி சாத்தியமா என்பது சந்தேகம்தான். ஆனால், கடந்த சில போட்டிகளாக இலங்கை அணியும் மோசமாக விளையாடி வருகிறது என்பதே பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.
கேப்டன் சல்மான் அலி அகா (44 ரன்கள்), சைம் ஆயுப் (70 ரன்கள்), பாபர் அசாம் (91 ரன்கள்) என மிகவும் குறைவாக ரன்கள் குவித்துள்ளது பாகிஸ்தானுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத ஃபகர் ஸமான், சூப்பர் 8 சுற்றில் சேர்க்கப்பட்டார். அவரது ஆட்டம் பாகிஸ்தானுக்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது.
பந்துவீச்சைப் பொருத்தவரையில், உஸ்மான் தாரிக் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையளிக்கிறார். அவர் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஷாகின் ஷா அஃப்ரிடி நன்றாக பந்துவீசினார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது.
இலங்கை ஆறுதல் வெற்றி பெறுமா? ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமளிக்குமா?
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் நன்றாக விளையாடி, உலகக் கோப்பையை வெல்வதற்கான கடும் போட்டியாளராக இருந்த இலங்கை அணி, கடைசி மூன்று ஆட்டங்களாக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்படத் தவறியதால், அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றில் மிகவும் மோசமாக செயல்பட்டு தொடரிலிருந்து வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கக் கூடும்.
இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்று, தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி உள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்ட மூன்று தோல்விகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதும் நிசங்கா விளாசிய அருமையான சதத்தை மறக்கடித்துவிட்டது என்றே கூறலாம்.
இலங்கை அணியின் பேட்டிங் குறித்து அந்த அணி நிர்வாகம் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி பெறுமா? அல்லது பாகிஸ்தான் அணி மிகப் பெரிய வெற்றியை இலங்கைக்கு எதிராக பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...