

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.
வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 26 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் 32 ரன்களும், ஃபின் ஆலன் 31 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் நீஷம் 23 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ் மற்றும் கார்பின் போஷ்ச் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2007, 2009, 2010 மற்றும் 2014 ஆண்டுகளில் என மொத்தமாக நான்கு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு முதல் முறையாக டி20 உலகக் கோப்பைத் தொடரின் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்றைத் தொடரப் போகிறதா? அல்லது தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்றை மாற்றியமைக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.