மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, சிலர் வாய்ப்பேச்சாக பேசுகிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் நோக்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். சரியான கேள்வியாக இருந்தால் நாங்கள் பதில் சொல்வோம். நாங்கள் பேச்சைக் குறைத்து செயலில் காட்டுகிறோம்.
செய்வதையே சொல்கிறோம். இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டும் வகையில், மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்து வருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.