

சநாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கலான மனுவை, ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சநாதன தர்மம் குறித்த கருத்து விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய கோரி, தில்லியை சேர்ந்த வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதே விவகாரத்தில், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, பி.ஜெகநாத் என்பவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிறருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு மீது கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அந்த மனுவை விசாரிக்க சம்மதம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வினீத் ஜிண்டாலின் மனு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, "இந்த மனுவை இதே விவகாரம் தொடர்புடைய மனுவுடன் இணைக்க உத்தரவிடுவோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி வாதிடுகையில், "இதே கோரிக்கையுடன்கூடிய ஒரு மனு மீது உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அதே விவகாரம் தொடர்புடைய இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டிய தேவையில்லை' என்றார்.
அதற்கு நீதிபதிகள், "இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, அன்றைய தினம் விசாரணையின் போது இந்த விவகாரத்தையும் எடுத்துக் கொள்வோம்' என்றனர். மேலும், ஏற்கெனவே பி.ஜெகநாத் தாக்கல் செய்த ரிட் மனுவுடன் இதை இணைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.