தில்லி மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் அனுப்பியுள்ளார்.
யூனியன் பிரதேசமான தில்லி அரசில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
இதன்மூலம் தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்ற முடிவு எடுக்கும் அதிகாரம், தில்லி துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.
அவசரச் சட்டத்துக்கு மாற்றான தில்லி நிா்வாக திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் பலத்த எதிா்ப்புக்கு இடையே கடந்த வாரம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாநிலங்களவையிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | விபத்தில் சிக்கியவருக்கு காரை நிறுத்தி உதவிய ராகுல் காந்தி!
இந்நிலையில், தில்லி நிருவாக திருத்த மாசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக கட்சிகள் வாக்களித்தன.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதிய நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், '2 கோடி தில்லி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலமைப்பு கொள்கைகள் மீது முதல்வர் கொண்டுள்ள நம்பிக்கை பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.