காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி உதகையிலிருந்து புறப்பட்டு வயநாடு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வயநாடு சென்ற ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தியை வரவேற்று மகிழ்ந்தனர்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். பின்னா் மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடா்ந்து அவா் எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.
இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தது. இதையடுத்து, தற்போது அவா் வயநாடு எம்.பி.யாக தொடா்கிறாா்.
இவ்வழக்கு விவகாரத்துக்குப் பிறகு வயநாட்டுக்கு முதல்முறையாக ராகுல் காந்தி சனிக்கிழமை வருகை தந்துள்ளார்.
இதற்காக இன்று காலை புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னா் அங்கிருந்து காா் மூலம் உதகை, கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு சென்றார்.
முன்னதாக நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் விண்வெளி வீரா் ராகேஷ் சா்மாவை சந்தித்தார். பின்னா் மதிய உணவுக்குப் பிறகு கூடலூா் செல்லும் வழியில் முத்தநாடுமந்து பகுதியில் உள்ள தோடா் பழங்குடியின மக்களை சந்தித்து, அவர்கள் அளித்த தோடர் இன மக்களின் ஆடையை அணிந்து கொண்டு அவர்களுடன் நடனமாடினார்.
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.