இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததால் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 45 நாள்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும், இல்லையெனில் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கடந்த மே 30 ஆம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தும் தேர்தல் நடத்தப்படவில்லை.
உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதால், போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்று கூற முடியாது.
முன்னதாக, பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியதில் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. உலக மல்யுத்த கூட்டமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, தலைவர் உள்ளிட்ட 15 பதவிகள் அடங்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு 45 நாள்களுக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால் உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.