வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏழு மாதங்களாக வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மேலும் 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 215 நாட்களில் மட்டும் 60,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவும், மனிதத்தன்மை அற்றதாகவும் உள்ளது.
பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததற்கு யார் பொறுப்பு?
மணிப்பூரில் அமைதி, இயல்புநிலை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு ஏன் எந்தப் புலப்படும் வேலையையும் செய்யவில்லை?
காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியது போல பிரதமர் நேரடியாக தலையிட்டு விரிவாக ஆலோசனை நடத்தினால்தான் மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்வு கிடைக்கும்.” என்று கார்கே தெரிவித்துள்ளார்.