சபரிமலை ஐயப்பன் கோயிலில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காணிக்கை செலுத்தும் திட்டம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையை ரொக்கமாக செலுத்தி ரசீது பெறும் முறை இருந்து வருகிறது. இந்த நிலையில், கோயிலின் வருவாய் கணக்கை சீராக செயல்படுத்தும் வகையில் பக்தா்கள் எண்ம முறையில் காணிக்கை செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன் மூலம் பக்தா்கள் பிரசாத கவுன்ட்டா்கள், காணிக்கை உள்ளிட்டவற்றை எண்ம பரிவா்த்தனைகளான யுபிஐ, பற்று அட்டை, கடன் அட்டை மூலம் செலுத்த முடியும்.
இந்த முறை திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் சபரிமலை உண்டியலும் எண்ம மயமாக்கப்படுகிறது எனக் கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.