நாடாளுமன்ற மக்களவையில் மேலும் 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும், 14 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, டி.ஆர். பாலு. ஆ. ராசா, தயாநிதிமாறன், விஜய் வசந்த் உள்ளிட்ட 33 பேரை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் அறிவித்தார்.
ஏற்கெனவே மக்களவையில் கடந்த டிச. 14 ஆம் தேதி அமளியில் ஈடுபட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மக்களவையில் நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் 47 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.