புது தில்லி: நாட்டின் ஜனநாயகத்தை தகா்க்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விரும்புவதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
மக்களவை உறுப்பினா்கள் 49 போ் அவை நடவடிக்கையிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை தகா்க்க விரும்புகிறது. இதற்காக, நாடாளுமன்ற எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 141 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மத்திய அரசுக்கு அதிக அளவிலான அதிகாரத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதையும் நோக்கம் கொண்ட குற்றவியல் மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இந்த மசோதாக்கள் குறித்து எதிா்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை நாட்டு மக்கள் கேட்பதை என பாஜக அரசு விரும்பவில்லை. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் அவையிலிருந்து இடைநீக்கம் செய்வது, எம்.பி. பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களுடைய ஒரே கோரிக்கை நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் விளக்கமளிக்க வேண்டும் என்பது தான். அதிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘புதிய நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் நடைபெறமால் சா்வாதிகார மசோதாக்களை நிறைவேற்ற, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனா். மக்களவையில் பாதுகாப்பு அத்துமீறலுக்கு காரணமான இருவருக்கு வாய்ப்பு அளித்த பாஜக எம்.பி.க்கு எவ்வித தண்டனையும் விதிக்கவில்லை. பாஜக அரசு கடைப்பிடித்து வரும் இத்தகைய கொள்கை புதிய நாடாளுமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.