‘மோடி உங்கள் குடும்பத்தில் ஒருவர்’ : மோடி
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, கிராமப்புற வாழ்க்கையில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கை வலுப்படுத்தும்வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பால் மற்றும் சர்க்கரை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதி செய்திருக்கும் நேரத்தில் விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக புது தில்லியில் மக்களைச் சந்தித்த மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அரசின் நலத்திட்ட உதவிகளால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்
1 கோடி பேருக்கும் அதிகமான பேருக்கு மத்திய அரசின் மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், முந்தைய காலம் போல ஆட்சி இருந்திருந்தால் மக்கள் அரசு அலுவலகங்களையே சுற்றி வர வேண்டியிருக்கும் என காங்கிரஸ் ஆட்சியைக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த ஆட்சியில் வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றுக்கு இடமில்லை. மோடி உங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்களுக்கு வேறு எந்தத் தொடர்பும் (நலத்திட்ட உதவிகள் கிடைக்க) வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு
பெண்கள், சுய உதவி குழுக்கள் மூலமாகப் பயன்பெறுவதாகவும் அரசு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் சேகரிப்பு நிலையங்களை அமைக்கவிருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.