அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து பாஜக அலுவலகம் நோக்கிப் போராட்டம் நடத்திச் சென்ற ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் மீது சண்டீகர் காவல் துறை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர்.
அதானி குழுமப் பங்குகளில் முறைகேடுகள் நடந்ததாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்தியப் பங்குச் சந்தையிலும், அதானி குழுமப் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தன. பணக்காரர்கள் பட்டியலிலும் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கையிலெடுத்தன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையும் படிக்க: பாஜகவுக்கு உதவும் செயலில் திரிணமூல்: காங்கிரஸ்
இந்த நிலையில், அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து பாஜக அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியாக போராட்டம் நடத்திச் சென்ற சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் பஞ்சாபின் பல பகுதிகளில் இருந்தும் ஒன்றாக திரண்டு பாஜக அலுவலம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக தலைமையகத்தின் உள்ளே நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்றதால் அவர்கள் மீது காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சிக் கொடியினை கையிலேந்தியும், அதானி விவகாரம் தொடர்பாக முழக்கத்தினை எழுப்பியும் முன்னேறினர்.
இதையும் படிக்க: இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் உடற்பயிற்சி விடியோ!
இது தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் கூறியதாவது: அதானி குழுமம் பாஜகவின் ஆட்சியின் கீழ் வளர்ந்தது. ஆனால், தற்போது அதானி குழுமத்தின் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் என்றனர்.