பெங்களூரு: பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சுமார் ரூ.17,000 கோடியில் தயாராகிவிடும் இந்த பசுமைவழிச் சாலை திட்டத்தால், இரு நகரங்களுக்கு இடையேயான பயணம் மிக விரைவானதாக இருக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சாலை திறக்கப்பட்டால், மிக முக்கிய நகரங்களுக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்
பெங்களூரு - சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.
இந்நிலையில், இந்த விரைவுச் சாலையின் கட்டமைப்புப் பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழி ஆய்வு மேற்கொண்டார். கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பட்டீலும் உடனிருந்தார்.