ஏர் இந்தியா விமானத்தில் பெண்கள் மீது சிறுநீர் கழித்தவர்களுக்கு 30 நாள்களுக்கு பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெண்கள் மீது சிறுநீர் கழித்தவர்களுக்கு பறப்பதற்கு தடை விதிப்பதுதான் தண்டனையா? என தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவம்பர் 26ஆம் தேதி தில்லி - நியூ யார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது அருந்திய நபர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 நாள்களுக்குள் டிசம்பர் 6ஆம் தேதி தில்லி - பாரீஸ் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் மது அருந்திய நபர் ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த இரு சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தில்லி - பாரீஸ் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், தில்லி - நியூ யார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாள்கள் விமானத்தில் பறப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், விமானத்தில் குடித்துவிட்டு பெண்கள் மீது சிறுநீர் கழிப்பது அவமானகரமான செயல். குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. விமானத்தில் அவர் பறப்பதற்கு தடை விதிப்பது மட்டும் தண்டனையா? தில்லி காவல் துறை, விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவுள்ளேன் எனக் குறிப்பிட்டார்.