ஜலந்தர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சனிக்கிழமை காலை பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. சௌதரி சந்தோக் சிங் மரணமடைந்தார்.
நடைப்பயணத்தின்போது, திடீரென மயங்கி விழுந்த சந்தோக் சிங், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தோக் கிங் மறைவைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அடுத்த 24 மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் ஜலந்தர் அருகே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் சனிக்கிழமை காலை லதோவால் பகுதியிலிருந்து தொடங்கியது. கொராயா நோக்கி நடைப்பயணம் சென்று கொண்டிருந்த போது திடீரென சந்தோக் சிங் மயங்கி விழுந்து பலியானார். அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து நடைப்பயணத்திலிருந்து பாதி வழியிலேயே ராகுல் புறப்பட்டுச் சென்றார். அவர் ஜலந்தரில் உள்ள சந்தோக் இல்லத்துக்கு விரைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.