புவனேஸ்வரம்: ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம், ரூ.1.57 கோடி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்திருப்பர். காரணம், சோதனை நடந்தது என்னவோ ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்தான்.
கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது அஞ்சல் துறை வைப்பு நிதி ரூ.2.5 கோடியாக உள்ளது.
ஜெனாவுக்கு தொடர்புடைய பல இடங்களில் செவ்வாயன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில், 60 வயதாகும் ஜெனா, ரயில்வே கூடுதல் மண்டல மேலாளர், சரக்குப் போக்குவரத்து முதன்மை மேலாளர் உள்பட பல உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. 17 கிலோ தங்கம், 1.57 கோடி ரொக்கம்.. : அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்
1989ஆம் ஆண்டு ரயில்வேயில் பணியில் சேர்ந்த ஜெனா, 2022ஆம் ஆண்டு இறுதியில் பணி ஓய்வுபெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டு வரை இவர்களது சொத்து மதிப்பு வெறும் ரூ.4.53 லட்சம்தான். ஆனால், இதுவே 2020ஆம் ஆண்டு ரூ.4.28 கோடியாக உயர்ந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், இதேக் காலக்கட்டத்தில் இவர்களது செலவுகளும் பல கோடிகளைத் தொட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மட்டும் ரூ.88.58 லட்சம் செலவிடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.