பானாஜி: கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்டில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதில் பாரையொட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதமடைந்தன.
சம்பவத்தின் போது வளாகத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், ரூ.40 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கோவா ரெஸ்டாரண்ட் பாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு, அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டிருக்காலம் என தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது.
இதையும் படிக்க | பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் காலமானார்
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் நிபுணர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாக” அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பாரில் மின் விபத்துகளோ அல்லது ஏ.சி. வெடித்தது போன்ற அறிகுறிகளோ, வெடிபொருட்களோ எதுவும் சிக்கவில்லை. எனவே அங்கு வெடித்தது என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.
இது குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை நடைபெற்று வருகிறது, அது முடிந்ததும் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார்.