தில்லி கடமைப்பாதையில் இன்று மாலை முப்படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் இசை நிகழ்ச்சியே பாசறை திரும்பும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் ராணூவம், விமானப்படை, கடற்படை சேர்ந்த 29 வகையான இசைக்கருவிகள் இசைக்கப்பட உள்ளன.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் விழா நாடாளுமன்றம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவரும் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான திரௌபதி முா்மு பங்கேற்பாா். பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் கலந்து கொள்ளும் இவ்விழாவில், உள்நாட்டில் தயாரித்த 3,500 ஆளில்லா விமானங்கள் அடங்கிய நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் நிகழ்ச்சியும் நடைபெறும்.
வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் முகப்பில் நடைபெறஉள்ள படைவீடு திரும்புதல் விழாவின்போது முதல்முறையாக, முப்பரிமாண ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2 நாள்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்
ஒவ்வோா் ஆண்டும் நான்கு நாள்கள் நீடிக்கும் குடியரசு தின விழாவின் நிறைவைக் குறிப்பிடும் வகையில், படைகள் பாசறைக்குத் திரும்புதல் விழாவானது தேசத்தின் பெருமிதமாக கருதப்படுகிறது.