பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் பாஜக தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநயாக கூட்டணி கட்சிகளின் நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் பேசியது:
“கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார். கரோனா நெருக்கடியில் உலக நாடுகள் சிக்கித் தவித்தபோது இந்தியா அதனை சமாளித்து பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றது.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்று பாராமல் அனைவருக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி மட்டும்தான். காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே 2ஜி ஊழலுக்கு கனிமொழியும், ராசாவும் கைது செய்யப்பட்டனர். அதனால், முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை பற்றி பேச தகுதி இல்லை.” எனத் தெரிவித்தார்.