வெறுப்பு, வன்முறையைப் பரப்பி நாட்டைப் பிரிக்கவே பாஜக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பாட்னா வந்தடைந்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'வெறுப்பு, வன்முறையை பரப்பி நாட்டை உடைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், அன்பைப் பரப்பவும் ஒற்றுமைக்காகவும் நாங்கள் உழைக்கிறோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று இங்கு வந்துள்ளன. நாங்கள் ஒன்றாக இணைந்து பாஜகவைத் தோற்கடிப்போம்.
இந்தியாவில் கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ‘பாரத் ஜோடோ' எனும் ஒற்றுமை நடைப்பயணம் சித்தாந்தம், மறுபுறம் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் ‘பாரத் டோடோ’ (இந்தியாவின் அடையாளத்தை அழிப்பது) சித்தாந்தம். காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ பிகாரில் உள்ளது' என்று பேசினார்.
மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுத்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் அவா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகள் கூட்டம்: பிகார் வந்த கார்கே, ராகுல் காந்தி!