கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களைத் தேர்தலில் தோல்வியடைந்த 160 தொகுதிகளை கைப்பற்ற பாஜக புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அதில், பாஜக தோல்வியடைந்த 160 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 160 தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு நான்கு தொகுதிகளுக்கு ஒரு கூட்டம் என மொத்தம் 45 முதல் 55 பொதுக்கூட்டங்கள் வரை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்த கூட்டங்களை மத்திய அரசு அல்லது பாஜக ஆளும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா போன்ற பெயரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, 160 தொகுதிகளை இரண்டாக பிரித்து 80 தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 80 தொகுதிகளில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் நேரில் சென்று பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் பங்கேற்கவுள்ளனர்.
முதல் கட்ட தேர்தல் பிரசாரத்திலேயே கடந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்த 160 தொகுதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றும் இலக்கை வகுத்து, அதன்படி செயல்படவிருக்கிறார்களாம்.
அடுத்த கட்டமாகவே நாடு முழுவதும் மீதமுள்ள 383 தொகுதிகளில் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த தகவலின்படி, அடுத்த ஓராண்டில் தமிழகத்திற்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 10 முறை வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.