பெங்களூரு மற்றும் மைசூருவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.15 கோடி ரொக்கம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவும் விதமாக பலரும் சட்ட விரோதமாக பணம் மற்றும் நகைகளை பதுக்கி வருவதாகவும் வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சாந்தி நகர், காக்ஸ் டவுன், சிவாஜி நகர், கன்னிங்ஹம் சாலை, சதாசிவ நகர் மற்றும் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிக அளவிலான பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டது என்றனர்.
கர்நாடகத்தில் பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.