கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகளை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் நாட்டின் 35 நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பானது 9 ஆண்டுகள், 9 கேள்விகள் என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: 29 பத்திரிகையாளர் சந்திப்புகள் நாளை (மே 27) குவஹாட்டி, தர்மசாலா, திருவனந்தபுரம், ஸ்ரீநகர், நாக்பூர், ஹைதராபாத், இந்தூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் (மே 28) 3 பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் கொல்கத்தா, பூனே மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளன. மே 29 ஆம் தேதி மும்பை மற்றும் பெங்களூருவில் இரண்டு பத்திகையாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. மே 30 ஆம் தேதி லக்னௌவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான கால அட்டவணையை ட்விட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: அடுத்த மூன்று நாள்களில் காங்கிரஸ் நாட்டின் 35 நகரங்களில் 9 ஆண்டுகள், 9 கேள்விகள் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்.அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக கேட்பதற்கு எங்களிடம் 9 கேள்விகள் உள்ளன. 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் இந்த 9 கேள்விகளை காங்கிரஸ் கேட்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.